வேலூர் நறுவீ மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை முன்னாள் இயக்குநர் டாக்டர் ஜாய்ஸ் பொன்னையா பரிசு வழங்கினார் சர்வதேச மகளிர் தின விழாவையொட்டி வேலூர் நறுவீ மருத்துவமனையில் நடத்தப்பட்ட சர்வதேச மகளிர் தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை முன்னாள் இயக்குநர் டாக்டர் ஜாய்ஸ் பொன்னையா பரிசு வழங்கினார்.
மகளிருக்கு சம உரிமை, அதிகாரம் வழங்கும் வகையில் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தின விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூர் நறுவீ மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா பல்வேறு நிகழ்வுகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவிற்கு வருகை தந்தவர்களை மருத்துவமனை மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் தாயர் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு நறுவீ மருத்தவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமை வகித்து பேசுகையில் ஒரு குடும்பத்தை எடுத்துக்கொண்டால் தாய், மனைவி, சகோதரி, மகள், மருமகள், பேத்தி என்று பெண்கள் சம பங்கு எடுத்து வருகின்றனர். தொன்று தொட்டு இந்திய கலாசாரத்தில் பாரம்பரியமாக பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மேற்கத்திய கலாச்சாரம் பரவி இருந்தாலும், பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு சிறு வயது முதலே நமது பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை சொல்லி வளர்த்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
‘சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதற்கு இணங்க அனைத்திலும் பெண்கள் சம பங்கு பெருகின்றனர். அதன்படி. சமுதாயத்தில் பெண்களுக்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டியது அவசியமாகிறது. பெண்களுக்கு வழங்கப்படும் சம பங்கு காரணமாக இன்று பைலட், இராணுவம், காவல் துறை, மருத்துவத் துறை, சட்டம் மற்றும் நீதி, நிர்வாக துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உயர் பதவி வகித்து வருகின்றனர். மருத்துவ சேவையில் பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது. நறுவி மருத்துவமனையில் ஆண் பணியாளர்களைவிட பெண் பணியர்களின் எண்ணிக்கை அதிகம், இம்மருத்துவமனை பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
மகளிர் தின விழா என்பது ஒரு நாள் கொண்டாடும் நிகழ்ச்சியாக இல்லாமல், ஆண்டு முழுவதும் கொண்டாடலாம் அது பெண்களுக்கு நாம் அளிக்கும் கவுரவம் என்று குறிப்பிட்டார். விழாவில் வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்னாள் இயக்குநர் டாக்டர் ஜாய்ஸ் பொன்னையா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சர்வதேச மகளிர் தின விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசுகையில்
சமுதாயத்தில் பெண்களுக்கு பங்கு மற்றும் அதிகாரம் என்பது சம இன்றியமையாதது. மருத்துவம் மற்றும் சுகாதார சேவையில் பெண்களின் பங்கு அதிகம். பெண்களின் சேவையை ஊக்குவிக்க வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது உன்னதமானதாக இருக்க வேண்டும். பெண்கள் தனியுரிமையுடன் மகிழ்ச்சியாக பணியாற்ற உதவியாக இருக்க வேண்டும். பெண்கள் அறிவு சக்தியாக விளங்க வேண்டும் அது அவர்களுக்கு தற்காப்பு ஆயுதமாக அமையும், சேவை பணியில் உள்ள பெண்கள் நேர்மை மற்றும் இரக்க குணம் உடையவர்களாக இருக்கு வேண்டும் அது அவர்களை உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றார்.
நிகழ்ச்சியில் மருத்துவமனை குழந்தைகள் நல தலைமை மருத்துவர் சோனியா மேரி குரியன், மகப்பேறு மருத்துவர் ரம்யா ஆகியோர் பெண்கள் அதிகாரம் மற்றும் சம உரிமை பற்றி பேசினார்கள். இதில் மருத்துவமனை மகப்பேறு தலைமை மருத்துவர் அருணா கேக்ரே, பொது மேலாளர் நித்தின் சம்பத் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என பலர் பங்கேற்றனர். முடிவில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ் நன்றி கூறினார்.