மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் கீழ்வேளூரில் பொது கட்டண கழிவறை நவீன முறையில் மறுசீரமைப்பு புகார் தெரிவிக்க கியூ.ஆர். கோடு வசதி: ஆட்சியர் ஆய்வு செய்து மாவட்டம் முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை என உறுதி.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் நாகை மாவட்டம்
கீழ்வேளூரில் பொது கட்டண கழிவறை நவீன முறையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு புகார் தெரிவிக்க கியூ.ஆர். கோடு வசதி செய்யப்பட்டுள்ளது. ‘டாய்லட் 2.0’ போட்டி மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ‘டாய்லட் 2.0’ என்ற போட்டியை அறிவித்து இருந்து. இதில் பொதுக்கழிவறைகளின் தற்போதைய நிலை குறித்து இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேலும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் வசம் உள்ள கழிவறையை தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் பங்களிப்புடன் புனரமைத்து கழிவறையை மேம்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பிப்ரவரி மாதம் 15-ந் தேதிக்குள் கழிவறைகளை மேம்பாடு செய்து மாற்றி அமைத்து மீண்டும் அதன் நிலைமையை இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது. ‘டாய்லட் 2.0’ போட்டியில் கீழ்வேளுர் பேரூராட்சி கலந்து கொண்டது. 3-வது வார்டு வடக்கு வீதியில் பேரூராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும், கட்டண கழிவறை நவீன முறையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு தனியார் ஆர்கிடெக் கல்லூரி மாணவர்கள் கழிவறையின் தோற்றத்தை எழில்மிகு வடிவில் மாற்றி அமைத்துள்ளனர்.
மத்திய அரசு அறிவித்த போட்டியின் கடைசி நாளான நேற்று மறுசீரமைப்பு செய்யப்பட்ட பொதுக் கழிவறை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. கழிவறையில் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கழிவறைக்கு செல்லும் வழி சேறும் சகதியுமாக இருந்ததால் நடை பாதையில் கற்கள் பதிக்கப்பட்டு விளம்பர பலகை அமைக்கப் பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், திருநங்கை மற்றும் மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் கழிவறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

கைகளை சுத்தம் செய்ய திரவ சோப் எந்திரம், தானியங்கி நாப்கின் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. கழிவறையில் உள்ள குறைபாடுகள் குறித்து செல்போன் மூலம் புகார் தெரிவிக்க ‘கியூ.ஆர். கோடு’ வசதி செய்யப்பட்டுள்ளது. செல்போன் இல்லாதவர்கள் கருத்து தெரிவிக்க மின்னணு எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. புகார் புத்தகமும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நறுமணமூட்டும் வசதி உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. கீழ்வேளூரில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நவீன முறையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ள கழிவறையைமாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.