உலக கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இங்கிலாந்து,
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தன. இந்நிலையில் கடைசி லீக் போட்டி தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது.
ஷோபனா மோஸ்தரி
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷமீமா சுல்தானா 11 ரன்களும், முர்ஷிதா காதுன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷோபனா மோஸ்தரி 27 ரன்களும், கேப்டன் நிகார் சுல்தானா 30 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினர்.
அடுத்து வந்தவர்களில் நஹிதா அக்தர் 15 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி வீராங்கனைகள் லாரா வோல்வார்ட் மற்றும் தஸ்னிம் பிரிட்ஜ் களத்தில் இறங்கினர்.
லாரா வோல்வார்ட்
பொறுப்புடன் விளையாடிய இருவரும் மற்ற பேட்டர்களுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் இவர்களை ஆட்டத்தை முடித்து வைத்தனர். 56 பந்துகளை சந்தித்த லாரா வோல்வார்ட் ஒரு சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 66 ரன்கள் எடுத்தார். தஸ்மின் பிரிட்ஸ் 51 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். 17.5 ஓவரில் 117 ரன்களை எடுத்து தென்னாப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்று, அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.